Ticker

6/recent/ticker-posts

Smile every moment cats kutty story

உங்களை சிரிக்க வைக்கும் குட்டிக்கதை!

ஒரு முறை, உலக அளவில் பூனைகளுக்கான (Cats) குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது!

அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னனியில் இருந்தது!

இந்தியா பூனை, பாகிஸ்தான் பூனை, ஜெர்மனி பூனை, ஆஸ்திரேலியா பூனை....

இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன!

அமெரிக்கா பூனையல்லவா!!!

பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு,கொழுவென இருந்தது!

கடைசி இறுதி சுற்று...

இந்தச் சுற்றில் அமெரிக்கப் பூனையிடம் சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்!

பார்வையாளர்களுக்கு வியப்பு!

காரணம்...

சோமாலியா நாட்டுப் பூனை... நோஞ்சானாக மெலிந்து... நடக்கவே தெம்பற்று தட்டுத் தடுமாறி... முக்கி முணங்கி மேடையேறியது!

‘இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது!’ என்று பேசி கூடி இருந்த பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்!

போட்டித் துவங்கியது!

அமெரிக்கா பூனை அலட்சியமாக சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது!

சோமாலியா பூனை முன்னங்காலை சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரே அடி! அவ்வளவு தான்...

அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள் ஒரு பல்பு ப்பளீச் என்று எரிந்து படாரென வெடித்துச் சிதறியது!... அடுத்த கணம், கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது.

மறுபுறம் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்கள்!

சற்று நேரம் சென்றபின்,

மெதுவாக கண்விழித்து பார்த்த அமெரிக்கா பூனைக்கு ஒன்றுமே புரியவில்லை!

சோமாலியா பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது!

போட்டியில் வென்றதற்காக சோமாலியா பூனையை எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள்!

மெதுவாக எழுந்து சோமாலியா பூனையின் அருகில் சென்று,’ இத்தனை நாட்டு பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது எப்படி?’ என்று கேட்டது அமெரிக்கப் பூனை!

அமெரிக்கா பூனையின் காதில் மெதுவாக சோமாலியா பூனை சொன்னது!

‘டேய்! நான் பூனையே இல்லை! புலிய்ய்டா! (Tiger) என் நாட்டு பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்!’ என்று.

இதனைக் கேட்ட அமெரிக்கப் பூனை அதிர்ச்சியில் இறந்தது.

இதன் மூலம் நாம் அறிவது : 
பாலும், கறியும் உண்டாலும் பூனை பூனைதான்! அதே போல பல நாள் பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்! 

உடல் தோற்றத்தை வைத்து எதையும் தீர்மானிக்க கூடாது அவர்களின் பலம் நமக்குத் தெரியாது............ 

Post a Comment

1 Comments